Oct 26, 2015

அமெரிக்க ஈரானிய உறவு! (ஒரு எக்ஸ்ரே பார்வை)

போலி வேசங்களால் முஸ்லீம் உம்மா நிறையவே ஏமாற்றப் படுகிறது . முஸ்லீம் உம்மா ஆதிக்கப்படுத்தப் படுவதட்கும் ,அதன் வளங்களை சுரண்டுவதட்கும் ஆளும் குப்ரிய தாகூத்கள் எப்படியெல்லாம் திட்டம் போடுகிறார்கள் ? என்பதை உணர்ந்து கொள்ள பல்வேறு பட்ட தளங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களே கீழே வருகின்றது . இஸ்லாத்தின் பெயரால் முன்வைக்கப்படும் இந்த நயவஞ்சக அரசியலில் சத்தியத்தின் குரல்வளை நவகாலனித்துவ பூர்சுவா பூட்சுகளால் மிதிக்கப்பட ,அந்த பூட்சுகளை முஸ்லீம் உம்மத் தமது விடுதலை சின்னங்களாக கருத வேண்டும் ! இதுதான் எதிரியின் எதிர்பார்ப்பு.

சவூதி என்ற சாலப் மாயை, ஈரான் என்ற சண்டித்தனம் மிக்க வீரன் , துருக்கி எனும் நவ இஸ்லாமியப் போலி !!! இவைகளைத் தாண்டி இந்த முஸ்லீம் உம்மாஹ் தனது சுயமானதும் ,சுன்னாஹ் வரையருத்ததுமான கிலாபா அரசியலை நோக்கி அடிவைக்கக் கூடாது என்பதே அல்லாஹ்வின் எதிரிகளின் ஒரே எதிர்பார்ப்பாகும் .அப்படி சிந்தித்தால் அதை தடுக்க ,தவிர்க்க ,தவிடு பொடியாக்க ,அதெல்லாம் முடியாதபோது உள் முரண்பாடுகளை தூண்டி தாமதப் படுத்தி ,தமது எதிர்காலத்தை திட்டமிடுவதே அல்லாஹ்வின் எதிரிகளின் நிலைப்பாடாகும் .அதற்காக அரசியல் ,பொருளாதார ,இராணுவ ரீதியான திட்டங்களை தாராளமாகவே இன்று உலகில் பரவலாக்கி உள்ளார்கள் .இருந்தும்.....

 "இவர்கள் தங்களது வாய்களைக் கொண்டே (ஊதி அல்லாஹ்வின் ஒளியை ) அணைத்துவிட விரும்புகின்றனர் .எனினும் இந்த நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்தியாக்காமல் இருக்கப் போவதில்லை.

"அவனே தன்னுடைய தூதரை நேர்வழி உடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் இனைவைப்பாளர்கள் வெறுத்த போதிலும் எல்லா மார்க்கங்களையும் இது மிகைத்து விடும் ".(அல் குர் ஆன் 9:32-33)


"எனவே தைரியத்தை இழந்து விடவும் வேண்டாம் துக்கப்படவும் வேண்டாம் .நீங்கள் மூமீன்களாக இருந்தால் நீங்கள் தாம் (இம்மையிலும் ,மறுமையிலும் ) உயர்ந்தவர்கள் ". (அல் குர் ஆன் 3:139)


"......நிச்சயமாக முமீன்களுக்கு வெற்றியை கொடுப்பது எம்மீது கடமையாக இருக்கிறது " (அல் குர் ஆன் 30:47) என அல்லாஹ் தன்மீது கடமையாக்கியுள்ள வெற்றியின் முன்னறிவிப்பு முஸ்லீம் உம்மாவாகிய எமக்கு நிச்சயமாக இருக்கிறது .இந்த எண்ணத்துடன் கீழ்வரும் பதிவை படியுங்கள்.

இவண் சத்திய விடியலை தேடி போராடும் உங்களில் ஒருவன் அபூ ருக்சான்

மத்திய கிழக்குத் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் கொள்கையில் உலக எரிபொருள் விநியோகம், இஸ்ரேலின் பாதுகாப்பு, பயங்கரவாத அமைப்புகளிற்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கர வாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை, பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களின் பரம்பலைத் தடுத்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

அண்மைக் காலங்களாக அமெரிக்காவின் நட்புநாடுகளான இஸ்ரேல், சவுதி அரேபியா, எகிப்து ஆகியவை அமெரிக்காவின் மத்திய கிழக்கு தொடர்பான கொள்கை தமக்குப் பாதகமாக மாறுவதாக உணர்கின்றன. இந்த நாடுகளின் ஊடகங்கள் இதை அடிக்கடி சுட்டிக் காட்டுகின்றன.சவுதியும் எகிப்தும் இரசியாவுடன் தமது நட்பை வளர்க்க முயல்கின்றன.

சிரியப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை அங்கு இருக்கும் வேதியியல் படைக்கலன்களை அழிப்பது மட்டுமே. அங்கு நடக்கும் மோதல்கள் பற்றியோ அங்கு ஒரு இலட்சத்தையும் தாண்டிப் போயுள்ள உயிரழப்புக்களைப்பற்றியோ அமெரிக்கா கவலைப்படவில்லை.

ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் தற்போது ஒன்றிற்கு ஒன்று அதிகம் தேவைப்படுகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை ஈரானைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையால் 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என பல பொருளாதார நிபுணர்கள் 2012இல் எச்சரித்திருந்தனர். ஆனால் 2013 இன் பிற்பகுதி வரை ஈரான் பொருளாதரத் தடைக்கு எதிராகத்தாக்குப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் இந்தப் பொருளாதாரத் தடையில் இருந்து விடுபட்டால் ஈரானிய மக்கள் பெரிய சுமையில் இருந்து விடுபடுவார்கள். ஈரானியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதற்காக சில விட்டுக் கொட்டுப்புக்களைச் செய்து ஈரான் அமெரிக்காவுடன் உறவை வளர்க்க ஈரான் விரும்புகிறது.

ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டால் உலகில் எரிபொருள் விலை குறைந்து உலகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதாலும் ஈரானிற்கு அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவு ஏற்றுமதியைச் செய்ய முடியுமமென்பதாலும் அமெரிக்காவிற்கு ஈரான் தேவைப்படுகின்றது. மேலும் அமெரிக்காவும் ஈரானும் உறவில் நெருங்கி வந்தால் அது பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளாக மேற்கு குறிப்பிடும் அமைப்புக்களைப் பலவீனப் படுத்துவதுடன் இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

அமெரிக்காவும் ஈரானும் தம் நிலைப்பாட்டில் செய்துள்ள மாற்றங்கள் நாளடைவில் மேம்பட்டு ஒரு கேர்ந்திரோபாய பங்காண்மையாக மாறும் சாத்தியம் உண்டு. இதற்கு பாலஸ்தீனப் பிரச்சனை தடையாக இப்போது இருகின்றது. இத் தடையை நீக்க பாலஸ்த்தீனத்தில் இரு அரசுத் தீர்வை அமெரிக்கா கொண்டுவர வேண்டும்.

1970களில் அமெரிக்காவும் ஈரானும் சவுதி அரேபியாவும் கேந்திரோபாயப் பங்காளிகளாக இருந்து கொண்டு சோவியத் ஒன்றியத்திற்கும் அதன் நட்பு நாடுகளாக இருந்த சிரியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளிற்கும் எதிராக ஒரு கேர்திரோபாய சமநிலையைப் பேணிக்கொண்டிருதன. ஈரான் மன்னாராக இருந்த ஷா மோசமான சுரண்டல் ஆட்சியைச் செய்து கொண்டிருந்த படியால் அங்கு மதவாதிகள் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றி ஈரானை அமெரிக்காவின் மோசமான எதிரி நாடாக வெளிப்படையாக மாற்றினர். பின்னர் காம்ப் டேவிட் உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அமெரிக்காவின் கேர்ந்திரோபாய நட்பு நாடாக மாற்றப்பட்டது.

இப்போது ஜெனிவாவில் நடக்கும் பேச்சு வார்த்தையின் பின்னர் அமெரிக்காவின் பங்காளியாக ஈரான் மாறினால் அமெரிக்காவால் இலகுவாக ஹோமஸ் நீரிணையைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் மற்ற மூலப் பொருள் விநியோகத்தையும் ஆபிரிக்காவிற்க்கான சீன ஏற்றுமதியையு்ம் நினைத்த நேரத்தில் இலகுவாகத் துண்டிக்க முடியும். தற்போது அமெரிக்கா பாஹ்ரெய்னில் இருக்கும் தனது கடற்படைத் தளத்தின் மூலம் ஹோமஸ் நீரிணையைப் பாதுகாத்து வருகின்றது.


சீனா பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தை தனது நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்கின்றது. அதில் இருந்து கொண்டு ஹோமஸ் நீரிணையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரானுடன் சீனா இணைய வேண்டும். ஆனால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களைசீனா இரத்துச் (வீட்டோ) செய்யாதது கடும் அதிருப்தியை அளித்தது. இதனால் சீன ஈரானிய உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்க ஈரானிய கேந்திரோபாய இணைவு சீனாவிற்கு ஆபத்தாக முடியும்.

ஈரான் அமெரிக்காவின் எதிரியா ?

ஈரான் எப்போதுமே அமெரிக்காவை எதிர்க்கக் கூடிய ஒரு தன்மானமுள்ள நாடு என்ற சிந்தனை முஸ்லிம்களிடம் பரவலாக இருப்பதை மறுக்க இயலாது. ஈரான் அமெரிக்காவை பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்த்து பேசுவதே இவ்வாறு நம்புவதற்கான காரணம் என்பதை அவதானிக்க முடிகிறது. உண்மையில் ஒரு நாட்டுடன் மற்றொரு நாடு கொண்டுள்ள வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் அளவுகோல் இது கிடையாது. ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் கொண்டுள்ள உறவை, அந்த இரு நாடுகளுக்குமிடையேயான தூதரக உறவு, ஒப்பந்தங்கள் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்காமல், வெறுமனே அந்த நாட்டை எதிர்த்து அறிக்கை விடுவதைக் கொண்டு மாத்திரம் தீர்மானிக்க இயலாது. ஈரானில் 1979 இல் ஏற்பட்ட புரட்சிக்கு பிறகு, ஈரான் அமெரிக்காவின் எதிரி என்பதாக பரவலாக முஸ்லிம்களை ஏமாற்றி வருவதால், ஈரானிய புரட்சியிலிருந்து நாம் ஆராய்வோம்.

ஈரானிய புரட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரின் அருகிலுள்ள Neauphle-le-Château என்ற ஊரில் கொமைனி தங்கியிருந்தார். அப்போது அவரை வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சந்தித்து அவரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தினர். பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவாக அமெரிக்க அரசோடு இணக்கமாக நடந்து கொள்வது என்பதாக கொமைனி முழு சம்மதம் தெரிவித்தார். அப்போது அமெரிக்க பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன.

இதை புரட்சிக்குப்பின் ஈரானிய குடியரசின் முதல் அதிபராயிருந்த அபுல் ஹசன் பனு சதர் 2000 ஆம் ஆண்டு அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். வெள்ளை மாளிகை தரப்பினருக்கும் கொமைனி தரப்பினருக்கும் மத்தியில் ஏற்பட்ட பலவேறு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ஈரானின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதாக உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் ஈரானின் வெளிவிவகாரக் கொள்கையில் கொமைனி அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொண்டார். இதன் பின்னர் கொமைனி பிரெஞ்சு விமானம் மூலம் ஈரான் வந்து சேர முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கொமைனிக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவேண்டுமென்று ஷா அரசால் பிரதமராக நியமிக்கப்பட்ட ஷஹ்புர் பக்தியாருக்கு அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதோடு கொமைனியோடு இணங்கி போகுமாறு ராணுவத்திற்கும் அச்சுறுத்தல் விடப்பட்டது.

ஈரானின் அரசியல் சாசன விதிமுறைகள், முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய முதலாளித்துவ அரசியல் சாசனத்தை மையமாகக் கொண்டு தொகுத்துள்ளதைப் போன்றே வரையறுக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஆட்சியமைப்பானது குடியரசு முறை, அமைச்சர்களுக்கு தனியதிகாரம், பாராளுமன்ற முறை, அதிகாரப் பகிர்வு போன்ற மேற்கத்திய ஆட்சியமைப்பு முறையை பின்பற்றியே இன்றும் உள்ளது. சில முஸ்லிம் நாடுகள் இஸ்லாத்தை அரசு மதமாக அறிவித்துள்ளது போன்றே ஈரானும் இஸ்லாத்தை அரசு மதமாக அங்கீகரித்துள்ளது. இதை வைத்து அதை இஸ்லாமிய அரசு என்றோ, இஸ்லாமிய சட்டங்கள் ஈரானை ஆட்சி செய்வதாகவோ ஒருபோதும் கருதிவிடக்கூடாது.

ஏனெனில் அந்த நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் செயலாக்க அமைப்புகள் (Systems) இஸ்லாத்திற்கு முரணானவை. ஈரானுடைய அரசியல் சாசனம் இஸ்லாமிய அகீதாவைக் கொண்டு வகுக்கப்பட்டதல்ல. மாறாக தேசியவாத அடிப்படையில் மேற்கத்திய அரசியல் சாசன அமைப்பை தழுவி, பெரும்பாலான முதலாளித்துவ கோட்பாடுகளுடன் சில இஸ்லாமிய சட்டங்களை இணைத்து வகுக்கப்பட்டதாகும். மேலும் ஈரானிய புரட்சி ஏற்படுவதற்கு முன்னர், இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் கொமைனியை சந்தித்து அமெரிக்காவிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று கூறியதோடு இஸ்லாமிய அரசியல் சாசனத்தை முன்மாதிரியாகக் கொள்ளுமாறும் விடுத்த வேண்டுகோளை கொமைனி முற்றிலும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இமாம் ஜஃபர் சாதிக் அவர்களின் மத்ஹபான ஜஃபரி மத்ஹபை தழுவியே ஈரானின் சட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுவதாக கூறுவது உண்மையல்ல. ஜஃபரி ஃபிக்ஹை, ஈரான் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காக புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ சட்டங்களையே முன்னெடுத்து செல்கின்றது. சவூதி அரேபியா இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை மட்டும் பின்பற்றிவிட்டு, பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, இஸ்லாமிய ஆட்சியமைப்பு போன்ற விடயங்களில் இஸ்லாத்தை புறந்தள்ளி ஆட்சி நடத்துவது போன்றே ஈரானும் செயல்பட்டு வருகிறது. ஈரான் மேற்கொண்டுவரும் நேரடியான அல்லது மறைமுகமான அரசியல் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு எதிரானதாக இருந்ததில்லை. மாறாக அவை அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இணங்கி போகின்றதாகவும் அமெரிக்காவின் திட்டங்களை அங்கீகரிப்பதாகவும் உள்ளது. இதற்கு ஏராளமான உதாரணங்களை கூறமுடியும்.

உதாரணமாக, லெபனானில் ஈரானால் உருவாக்கப்பட்டு ஈரானுடைய வழிகாட்டுதலில் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவை லெபனான் அரசு சிறப்பு ராணுவ பிரிவாக அங்கீகரித்துள்ளது. லெபனான் அரசாங்கம் மதச்சார்பற்ற கொள்கைகைகளையும் அமெரிக்க நலன்களை பேணி பாதுகாத்துவருவதையும், லெபனானில் வேறு எந்த பிரிவினருக்கும் இப்படிப்பட்ட இராணு பிரிவை வைத்திருக்க அனுமதியில்லை என்பதையும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். அமெரிக்க நலன்களை பேணி பாதுகாத்துக்கொண்டு சிரியாவில் மக்களை கொன்றுகுவித்து வரும் கொடுங்கோலன் பசர் அல் அசாதை காப்பாற்ற சிரியாவிற்கு ஹிஸ்புல்லாவை ஈரான் அனுபபிய செயல் மூலம் அமெரிக்க நலன்களை பாதுகாக்க ஈரான் உதவியுள்ளதை அறிந்துகொள்ளலாம்.

கொடுங்கோலன் பசர் அல் அசாத் ஷியா பிரிவைச் சார்ந்தவன் என்பதால் ஈரான் இவ்வாறு நடந்து கொள்கிறது என்று சிலர் கூறுவது உண்மையில்லை. ஈரானுடைய இந்த செயல்பாடு, இஸ்லாத்தை பாதுகாக்கவோ அல்லது ஷியா கொள்கைகளை பரப்புவதற்கோ ஒருபோதும் உதவாது. மாறாக அமெரிக்க நலன்களையே பாதுகாக்க உறுதுணையாக அமையும். பசர் அல் அசாத் பின்பற்றி வரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்ட பிரிவான அலவிஷியா கோட்பாட்டிற்கும் ஈரானியஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவானஇஸ்னா அஸரிய்யா பிரிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோதும், அங்குள்ள மக்கள் உணவு, மருந்து இல்லாமல் மடிந்தபோதும் ஈரான் என்ன செய்தது? ஈரான் நினைத்திருந்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. அமெரிக்காவிற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான், எப்போதாவது அதை செயலில் காண்பித்தது உண்டா? ஈரானின் நடவடிக்கைகள், அமெரிக்க நலன்கள் ஈராக்கில் பாதுகாக்கப்பட உதவியுள்ளன என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூறமுடியும். 2005 ஆம் ஆண்டு ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்புகளை சார்ந்த இப்ராஹீம் அல் ஜஃபரிமற்றும் அல் மாலிகி ஆகியோரை அமெரிக்கா அதிகாரத்தில் அமர்த்தியது. ஆக்கிரமிப்பிற்கு பிறகு இராக்கில் தூதரகத்தை மீண்டும் ஈரான் திறந்து கொண்டது. அல் மாலிகி ஈரானுக்கு விஜயம் செய்ததோடு பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 2008 ஆம் ஆண்டு அஹ்மது நிஜாத் ஈராக்கிற்கு இருமுறை விஜயம் செய்து அமெரிக்க பொம்மையான அல் மாலிகியை சந்தித்து அரசின் திட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மேலும் அஹ்மது நிஜாத் 2010 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்து அமெரிக்க ஆக்கிரமிப்பின் பாதுகாவலனான ஹமீது கர்சாயை சந்தித்து அமெரிக்காவுடனான நல்லுறவை வெளிப்படுத்தினார். ஈரானின் இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்க நலன்களை பேணி பாதுகாக்கவே உதவுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகும். அமெரிக்காவிற்கு எதிராக கண்டன அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான் ஒருபோதும் செயலில் இறங்காது என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். எமனில் பிரிட்டனின் ஏஜெண்டாக ஆட்சி புரிந்த அலி சாலிஹுக்கு எதிராக அல் ஹவுதி மக்களை தூண்டிவிட்டு உதவி செய்த ஈரான், தெற்கு எமனின் பிரிவினைவாத மதச்சார்பற்ற குழுவிற்கும் உதவி செய்தது. அமெரிக்காவின் மறைமுக ஆதரவு பெற்ற குழுக்களுக்கு ஈரான் உதவுவதன் மூலம் அமெரிக்க நலன்களே பாதுகாக்கப்படுகிறது.

ஈரான் சிரியாவிற்கு பக்கபலமாக இருப்பது ஒன்றும் புதிய விசயமல்ல. பசர் அல் அசாதின் தந்தை ஹஃபிஸ் அல் அசாத் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி ஆட்சியைப் பிடித்த காலகட்டத்திலிருந்தே இது தொடர்கிறது. அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக விளங்கும். அசாத் குடும்பத்தினரின் மதச்சார்பற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரபு தேசியவாதக் கட்சியான பாத் கட்சி, சதாம் ஹுசைனின் பாத் கட்சியோடு தொடர்பு கொண்டிருந்தது குறித்து ஈரான் நன்கு தெரிந்துகொண்டே அசாத் குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளது. ஈரான் அரசாங்கம் சிரியாவுடன் ராணுவம், வர்த்தகம், அரசியல் நடவடிக்கை போன்ற விசயங்களில் எப்போதும் உறுதுணையாகவே இருந்துள்ளது. நெருக்கடி நேரங்களில் சிரிய அதிபரைக் காப்பாற்ற ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பசர் அல் அசாதிற்கு ஈரான் பக்க பலமாக இருந்தது முதல் சமீபத்திய இரசாயன விசா வாயு படுகொலை சம்பவம் வரை உற்று நோக்குவோமானால், சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் அரசியல் ஆக்கிரமிப்பிற்கு ஈரான் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியுள்ளது நன்கு விளங்கும்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈரானும் சேவை செய்துள்ளது. வடக்கு பிராந்தியத்தில் ஈரானின் செயல்பாடுகளால் தாலிபான்களை அமெரிக்கா வீழ்த்த இலகுவாக முடிந்தது.“எங்களுடைய படைகள் தாலிபான்களுடன் போரிட்டிருக்காவிட்டால் அமெரிக்கா புதைகுழியில் சிக்கியிருக்கும்” என்று முன்னாள் ஈரான் அதிபர் ரப்சஞ்சானி கூறியிருந்தார் ((al-Sharq al-Awsat newspaper, 9/2/2002). அதே போன்று ஈரானிய துணை அதிபராயிருந்த முஹம்மது அலி அப்தஹி:- “எங்களுடைய ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால் பாக்தாதும் காபூலும் அமெரிக்காவின் கைகளில் வீழ்ந்திருக்காது” என்று கூறியிருந்தார். (Islam Online Net, 1/13/2004) ..

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் பங்கெடுக்க அமெரிக்கா சென்றிருந்த அஹ்மத் நிஜாத்:- “ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு ஈரான் உதவிக்கரம் நீட்டியது. எனினும் எங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை குறித்த அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கையே எங்களுக்கு பலனாக கிடைத்தது .. மேலும் ஈராக்கில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட எங்கள் நாடு ஏற்கனவே உதவியுள்ளது” என்று கூறியிருந்தார் (The New York Times on 26/9/2008).

ஈரானின் அணு சக்தி திட்டத்தை பொறுத்தவரை, இஸ்ரேல் பலமுறை ஈரானை அச்சுறுத்தியது நாம் அறிந்த விசயமே. இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு இருந்தும் அமெரிக்கா குறுக்கே நின்று இஸ்ரேலை தடுத்து வருகிறது. அமெரிக்கா 1981 ஆம் ஆண்டு இராக்கில் சதாம் ஆட்சியின்போது, கட்டுமான நிலையில் இருந்த அணுசக்தி நிலைகளை தாக்க இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கியது. ஆனால் 20% யுரேனியம் செறிவூட்டப்பட்ட நிலையில் உள்ள ஈரானின் அணு சக்தி நிலைகளை தாக்க இஸ்ரேலுக்கு அனுமதி மறுத்து வருகிறது. அமெரிக்காவின் சொந்த நலன்களுக்கு ஈரான் ஒத்துழைப்பு கொடுத்துவருவதற்காக, ஈரானுடன் சுமூகமாகவே இருக்க அமெரிக்கா விரும்புகிறது.

ஈரானை ஒரு எதிர் சக்தியாக உருவகப்படுத்துவதன் மூலம் மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா விரும்புகிறது. ஈரானை ஒரு கருவியாக உபயோகித்து முஸ்லிம் நாடுகளின் மீது ஆதிக்கத்தை அமெரிக்கா நிலை நாட்டிவருகிறது. அணு ஆயுதம் குறித்த பேச்சு வார்த்தை 2003 ஆண்டு துவங்கிய காலம் முதல் பேச்சுவார்த்தை நடைபெறும்போதெல்லாம், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை குறித்து பேசாமல் தடை – sanction பற்றியே பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

இது ஐரோப்பிய யூனியனுக்கும் இஸ்ரேலுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின்போதும் தடை - sanction குறித்தே அமெரிக்கா வலியுறுத்தியது. ஒவ்வொருமுறை இந்த பிரச்சனை தோன்றும்போதெல்லாம் ஈரானைக் குறித்த அச்சத்தை அமெரிக்கா போக்கிவந்தது. அணு ஆயுத பிரச்சினையை தீர்க்கப்படாத ஒன்றாக வைத்துக் கொண்டு, ஈரானை ஒரு தாதாவாக சித்தரித்து மத்திய கிழக்கில் எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்த அமெரிக்கா முனைந்து வருகிறது.

இதற்காகவே அமெரிக்கா ஈரானுக்கு மறைமுகமாக உதவி வருகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சில விசயங்களில் பிரச்சனைகள் இருப்பது உண்மையே. இதை வைத்து ஈரான் அமெரிக்காவின் கடும் எதிரி என்று தீர்மானிக்க கூடாது. கொமைனி பாரீஸ் நகரின் அருகிலுள்ள Neauphle-le-Château என்ற இடத்தில் தங்கியிருந்தபோது வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து நடந்த பேச்சுவார்த்தை போன்று பல்வேறு சமரச பேச்சுவார்த்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் பொம்மையாக இருந்து ஆட்சிபுரிந்த ஷா வீழ்வது நிச்சயம் என்று விளங்கிகொண்ட அமெரிக்கா ஈரானிய புரட்சியின் பலனை தனக்கு இணக்கமாக மாற்ற சில வேலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டது. ஈரானை அச்சுறுத்துவது போன்ற வெகுஜனக் கருத்தை உருவாக்கி, அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னுடைய நலனை பாதுகாத்து வறுகிறது என்பதே உண்மையாகும் . எனவே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுமூகமான உறவே நிலவி வருகிறது என்பதையும். ஈரானின் கடுமையான எதிரி அமெரிக்கா என்ற கூற்றில் உண்மையில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

நன்றி
ஹந்தக் களம்

No comments:

Post a Comment