Oct 27, 2015

'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 05

4. கிலாஃபத் முஸ்லிம் உலகின் குழப்பங்களுக்கு காரணமானதாக அமையாது அதன் ஸ்திரத்தன்மைக்கும், முழு உலகின் விமோசனத்திற்கும் காரணமாக அமையும் என புரிந்து கொண்டு முஸ்லிம்கள் கிலாஃபாத்திற்காக குரல் கொடுப்பவர்களாக மாற வேண்டும்.

 

 

 
இன்றைய ஊடகங்களின் சித்தரிப்புகளுக்கும், சிரியா, ஈராக் பிராந்தியத்திலிருந்து வெளிப்படும் அச்சுறுத்தலான காட்சிகளுக்கும் மாற்றமாக உண்மையான கிலாஃபத்தின் மீள் வருகை குறிப்பாக மத்திய கிழக்கின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் முஸ்லிம்களின் உண்மையான விமோசனத்திற்கும் அத்திவாரமாக அமையும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அந்த பிராந்தியத்தில் காலங்காலமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நம்பிக்கைகள், விழுமியங்கள், அவர்களின் விருப்பு வெறுப்புக்கள் அனைத்தையும் அது இயல்பாய் பிரதிபலிக்கக் கூடியதால் கிலாஃபத் அதனைச் சாதிப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. கிலாஃபத் அந்த மக்களின் உணர்வுகளையும், அபிலாசைகளையும் துல்லியமாக புரிந்து கொண்டு அவர்களுடன் வாஞ்சையான கூட்டுறவுடன் இயங்கும் அரசியல் அலகாக நிச்சயம் செயற்படும். ஏனெனில் அரசியல் முதல் ஆன்மீக அம்சங்கள் வரை இம்மக்களுக்கிடையே நிலவும் பொதுவான நம்பிக்கைகளையும், உணர்ச்சிகளையும் ஒன்றுகுவிக்கும் காந்தமாக இஸ்லாம் எனும் தூய சிந்தாந்தமே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 
கிலாஃபத் வீழ்த்தப்பட்ட நிகழ்வு இஸ்லாமிய உலகின் அதிகாரமும், தலைமைத்துவமும் முழுமையாக முஸ்லிம்களின் கைகளிலிருந்து பறிபோனதிற்கு ஒப்பானது. அது உருவாக்கிய வெற்றிடம் காலணித்துவத்துக்கும், சர்வாதிகாரங்களுக்கும் எதிராக எழுந்து நிற்கும் திராணியை உம்மத்திடமிருந்து பறித்தது. விளைவு, சுயநலமும், நயவஞ்சகமும் நிறைந்த கொடிய தலைமைத்துவங்களின் கைகளில் முஸ்லிம் உலகும், அவர்களின் விவகாரமும் மாட்டிக்கொண்டு அழிவுகளுக்கு மேல் அழிவு, பலகீனத்திற்கு மேல் பலகீனமென எமது நிலை மாறிப்போனது.
 

இன்று உலகு எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளிலிருந்து உலகை மீட்டு உலகை ஆரோக்கியமானதோரு திசையில் வழிநடாத்துவதற்கு கிலாஃபாவால் மாத்திரம்தான் முடியும். ஏனெனில் நபி வழியில் உருவாகும் அந்த கிலாஃபத் மனித மூளைகளின் பலகீனங்களாலும், குறித்த நபர்களின் சுயநலன்களாலும் மக்களை வழிநடத்தாமல் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் இறைவனின் வழிகாட்டல்களாலும், சட்டங்களாலும் வழிநடாத்தும். மேலும் அல்லாஹ்(சுபு) அருளியுள்ள இறைத்தூது அனைத்து காலங்களுக்கும், அனைத்து சமூகப்பின்னணிகளுக்கும் தீர்வு சொல்லக்கூடிய ஆளுமையுடன் காணப்படுவதால் அதனால் மாத்திரம் தான் மனிதகுலத்தை நேர்மையாகவும், நீதியாகவும் வழிநடாத்த முடியும்.
 

இத்தகைய ஆட்சி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டதாக அமையாது மக்களால் தேர்ந்தெடுக்கபட்டதாய் அமைவதுடன் கலந்தாலோசை ஊடாகவும், உறுதியான நீதித்துறையின் ஊடாகவும் கலீஃபா உட்பட அனைத்துத் தரப்புக்களையும் சட்டத்தின் முன் சமமாக நடாத்தும். அது இன, குல வாதங்களின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவர் மீது அத்துமீறாத பிரஜா உரிமை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் யாவருக்கும் பொதுவாய் அமைந்த ஆட்சியாக விளங்கும்.
 
பகுதி - 04 / பகுதி - 06

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Sources From
Darul Aman.Net

No comments:

Post a Comment