Sep 3, 2015

கண்ட கனவு நனவாகுதல்..!

 
காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 03

பின்பு தான் கண்ட கனவைப் பற்றி காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

காரிருள் கொண்ட அறை என்பது நீங்கள் அறியாமைக்காலத்தில் இருந்து கொண்டிருந்த இறைநிராகரிப்பு என்பதாகும். பின் அதனை விட்டு வெளியேறி பரந்த புல்வெளியை நோக்கி வருவது என்பது, இறைநிராகரிப்பில் இருந்து வெளியேறி, இஸ்லாத்தினுள் நுழைவதனைக் குறிக்கும். அந்தக் கனவு நீங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இப்பொழுது நனவாகி இருக்கின்றது என்றும், அவர்களது கனவிற்கு அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பயம் காரணமாகவோ அல்லது பெருமைக்காகவோ இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்மாதிரிகள் தான் அவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்கக் காரணமாக அமைந்தன. மனித குல வரலாற்றில் சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக பாடுபடுகின்ற மனிதர்கள் தொலை நோக்குச் சிந்தனையுடனும், வெளிப்படையான போக்குகளுடனும் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்வது என்பது, அவர்களது அடிப்படை மற்றும் சிறப்புத் தன்மைகளாக இருந்து வந்துள்ளன. எனவே தான் எதனை சத்தியம் என்று ஏற்றுக் கொண்டார்களோ அதனை வெளிப்படையாக மக்களுக்குத் துணிவுடன் அறிவிக்க அல்லது எடுத்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த இரண்டு அடிப்படை அம்சங்களாகிய துணிவு மற்றும் வெளிப்படையான தன்மை ஆகிய இரண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் காணப்பட்டதே, அவர்களை இஸ்லாமிய வரலாறு போற்றும் மாவீரராக உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும், இஸ்லாத்தின் பரம விரோதியாகவே இருந்தார். உஹத் போரிலே முஸ்லிம்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்கக் கூடிய அந்த வாய்ப்பை தவிடு பொடியாக்கி, தான் எந்த நோக்கத்திற்காக வந்தாரோ அந்த நோக்கத்தை அடைவதில் அவர் காட்டிய உறுதி மற்றும் தீவிரப் போக்கு ஆகியவைகள் தான் முஸ்லிம்களின் வெற்றியை நிலைகுலையச் செய்தது எனலாம். இருப்பினும், அந்தப் போரில் இறைநிராகரிப்பாளர்கள் வெற்றி பெற இயலாமல் போனதுடன், இனி நாம் முஹம்மது (ஸல்) அவர்களை வெற்றி பெற இயலாது என்ற நிலைக்கு, மன ரீதியாகத் தள்ளப்பட்டனர்.   முஸ்லிம்கள் நம்மை விஞ்சி விட்டார்கள், இனி அவர்களை நாம் எதுவும் செய்துவிட இயலாது என்று அனைத்து குறைஷித் தலைவர்களும் முடிவுக்கு வந்த பின்னரும், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றவர்களது முடிவை மண்ணில் போட்டுப் புதைத்து விட்டு, ஒரு குதிரைப் படையை ஒருங்கிணைத்துக் கொண்டு மலைப் பகுதியில் புகுந்து முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டு, முஸ்லிம்களுக்கு கடுமையான சேதத்தோடு, உயிர் சேதத்தையும் அதிகம் ஏற்படுத்தி விட்டார் காலித் பின் வலீத் அவர்கள்.

இத்தகைய மனிதர் தான், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பும் அதே வீரத்தோடும், விவேகத்தோடும் தான் எந்த நோக்கத்தை அடைய போர் முகத்துக்கு வந்தோமோ அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, வேகம் குன்றாது போரிட்டார் இந்த வீரமகன்.  அவர் தனது உயிரையும், பொருளையும், ஆவியையும் இறைமார்க்கத்திற்காக அற்பணித்து விட்டிருந்தார். அவர் என்றைக்கு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து, சத்தியத்தை மேலோங்கச் செய்யவும், அசத்தியத்தை வேரோடு சாய்க்கவும் போரிட்டுக் கொண்டே இருந்தார். இன்னும் மிகவும் கடுமையாக கால கட்டங்களில் கூட அவர், கொஞ்சம் கூட தடுமாற்றத்தை தன்னுடைய உள்ளத்தில் உலா விட்டதில்லை, நம்பிக்கையை இழந்து விடவில்லை.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீர தீர சாகசங்களை இன்றளவும் உலகம் வியந்து போற்றிக் கொண்டிருக்கின்றது. அவரது வீரம் செறிந்த அந்த தருணங்களை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தின் எதிரிகள் கூட போற்றும் அளவுக்கு, அவரது வீரத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். முந்தைய ஜெர்மன் படைத்தளபதியாக இருந்த ஜெனரல் அரோன் ரோம்மல் என்பவரிடம், அவருடைய  வெற்றியைக் குறித்துக் கேட்ட பொழுது, நான் காலித் பின் வலீத் அவர்களது தந்திரத்தைக் கையாண்டு கொண்டிருப்பதன் மூலம் தான் இத்தகைய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று பதில் கூறியிருக்கின்றார்.

ரோமப் பேரரசன் சீஸரை மண்ணுக்கு இரையாக்கி வைத்தது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டமிட்ட தாக்குதல்களும், அவர் தன்னுடைய படைவீரர்களை ஒருங்கிணைத்து செயலாற்றச் செய்ததது தான், அதன் காரணமாகும்.

ரோமும், பாரசீகமும் அன்றைக்கு இருந்த செல்வச் செழிப்பில் மற்றும் இராணுவ அமைப்பில் முஸ்லிம் படை அவர்களை வெற்றி கொள்வது என்பது இயலாத காரியம் என்றே, உலகத்தின் கணிப்பு இருந்திருக்கும். ஆனால், அத்தகைய படையை மண்ணோடு மண்ணாக ஆக்கி, அவர்களது பேரரசை புழுதி படியச் செய்த வரலாற்று நிகழ்ச்சியை ஏற்படுத்திக் காட்டியவர் காலித் பின் வலீத் (ரழி). சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடந்த அந்த இடையறாத போரில், இறைவனது துணை கொண்டு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வெற்றியைத் தவிர வேறெதனையும் கண்டதில்லை. தோல்வி என்பதே அவரது வரலாற்றில் இல்லை, என்ற சரித்திரத்தைப் படைத்தவர் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

                                                   பகுதி - 02 / பகுதி - 04       
 

No comments:

Post a Comment